பெரும்பள்ளம் ஓடையை ஆக்கிரமித்து வீடு கட்டி வாடகைக்கு விட்டவர்களுக்கு மாற்றிடம் கிடையாது ஈரோடு மாநகராட்சி திட்டவட்டம்

பெரும்பள்ளம் ஓடையை ஆக்கிரமித்து வீடு கட்டி  வாடகைக்கு விட்டவர்களுக்கு மாற்றிடம் கிடையாது  ஈரோடு மாநகராட்சி திட்டவட்டம்
Updated on
1 min read

பெரும்பள்ளம் ஓடையை ஆக்கிரமித்து வீடு கட்டி வாடகைக்கு விட்டுள் ளோருக்கு மாற்றிடம் வழங்கப் பட மாட்டாது, என ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பெரும்பள்ளம் ஓடையைத் தூர்வாரி புனரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஓடை மற்றும் ஓடைக்கரைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகளை அகற்ற வேண்டுமென ஆறு மாதத்திற்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனை ஏற்று பலர் வீடுகளைக் காலி செய்தனர்.

இந்நிலையில் மரப்பாலம் பகுதியில் காலி செய்யப் படாமல் இருந்த வீடுகளை அகற்ற கடந்த வாரம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது தங்களுக்கு ஒரு வார கால அவகாசம் வேண்டுமென அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஆக்கிரமிப் புப் பகுதியில் வசிக்கும் தங்களுக்கு குடிசைமாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென சிலர் மாநகராட்சி ஆணையர் இளங்கோவனிடம் நேற்று மனு அளித்தனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

பெரும்பள்ளம் ஓடை ஆக்கிரமிப்புப் பகுதியில் 1200 பேர் வசிப்பதாக கணக் கெடுப்பில் தெரியவந்தது. அவர்களின் வீடுகளை காலி செய்யச் சொல்லி நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

வீடுகளை காலி செய்வோருக்கு சித்தோடு அருகே குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இந்நிலையில், ஓடையை ஆக்கிரமித்து வீடு கட்டி, அதனை வாடகைக்கு சிலர் விட்டுள்ளனர். அவர்களுக்கு மாற்று இடம் வழங்க முடியாது என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in