

அண்ணல் அம்பேத்கர் விருதுக்கு சேலம் மாவட்டத் தில் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக பலர் அரிய தொண்டாற்றி வருகின்றனர். பட்டியலினத்தவர்களின் முன்னேற்றத்துக்காக தங்களை இணைத்துக் கொண்டு, அவர்கள் ஆற்றி வரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி, தமிழக அரசு சிறப்பித்து வருகிறது.
2021-ம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்படும் விருதுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை www.tn.gov.in/ta/forms /Deptname/1 என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், சென்னை ஆதி திராவிடர் நல ஆணையர் அலுவலகம் (அல்லது) மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண்.109-ல் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நாளை (11-ம் தேதி) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.