

சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. 53 நீதிபதிகள் பணிபுரிந்த நிலையில் மாவட்ட நீதிபதிகளாக இருந்த சந்திரசேகரன், நக்கீரன், வி.சிவஞானம், இளங்கோவன், ஆனந்தி, கண்ணம்மாள், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா, தமிழ்ச்செல்வி ஆகியோர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இவர்களில் நீதிபதிகள் முரளிசங்கர்-தமிழ்செல்வி ஆகியோர் தம்பதி ஆவர்.
புதிய நீதிபதிகள் 2 தினங்களுக்கு முன் பதவியேற்றனர். இவர்களில் 7 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகள் ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, கே.முரளிசங்கர் ஆகியோருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரும் முறையே 2014-ம் ஆண்டு வரையிலான உரிமையியல் மேல்முறையீடு வழக்குகள், 2015 முதல் 2018 வரையிலான உரிமையியல் சீராய்வு வழக்குகள், 2015 முதல் 2018 வரையிலான உரிமையியல் மேல்முறையீடு வழக்குகளை விசாரிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.