

`தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் மணல் மாபியாக்களுக்கு பாதுகாப்பாக உள்ளனர்’ என, உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் மணல் கடத்தலைத் தடுக்கக் கோரியும், சட்டவிரோத மணல் குவாரி நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாலகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரருக்கு கொலை மிரட்டல் வருவதால், அவருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகளிடம் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை காவல்கண்காணிப்பாளர், காவல் நிலையஆய்வாளர் ஆகியோர் காணொலி மூலம் ஆஜராகினர்.
அப்போது நீதிபதிகள், `உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மனுதாரருக்குப் பாதுகாப்பு வழங்காதது ஏன்? நீதிமன்றத்தின் உத்தரவை போலீஸார் எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்பது தெரிகிறது.
தூத்துக்குடி மாவட்ட போலீஸார் என்றாலே மக்கள் மனதில் ஒரு வடு உள்ளது. அந்த வடு இன்னும் அகற்றப்படவில்லை. சாத்தான்குளம் சம்பவத்தையடுத்து தூத்துக்குடி மாவட்ட போலீஸார்தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை என்பது தெரிகிறது.
இந்தச் சூழலில் பாதிக்கப்பட்ட ஒருவருக்குப் பாதுகாப்பு வழங்கஉத்தரவிட்டால் தூத்துக்குடி போலீஸார் மணல் மாபியாக்களுக்கு பாதுகாப்பாகச் செயல்படுகின்றனர். பணம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் காவல்துறை என்றால்,ஏழை மக்கள் எங்கே செல்வார்கள்? நீதிமன்ற உத்தரவை மீற போலீஸாருக்கு என்ன தைரியம்?’ என்றனர்.
பின்னர், மனுதாரருக்குப் பாதுகாப்பு வழங்க, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப் பாளருக்கு உத்தரவிட்டு வழக்கின்தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.