

தமிழகத்தில் முதல்முறையாக இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் முதுநிலைக் கல்வி பயில சேலம் பெரியார் பல்கலைக் கழகத்துடன், தேசிய மாணவர் படை இயக்குநரகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையழுத்திடும் நிகழ்ச்சி பெரியார் பல்கலைக் கழகத்தில் நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல் முன்னிலையில் பல்கலைக் கழக பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல், தேசிய மாணவர் படை இயக்குநரகம் சார்பில் கோவை மண்டல குரூப் கமாண்டர் கர்னல் எல்.சி.எஸ். நாயுடு ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதுதொடர்பாக பல் கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல் கூறியதாவது:
புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிகோபரில் உள்ள தேசிய மாணவர் படை இயக்குனரகத்தில் பணிபுரியும் முப்படைகளைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பெரியார் பல்கலைக்கழக மேலாண்மைத் துறையில் முதுநிலை பட்டப் படிப்பு, முதுநிலை பட்டயப் படிப்பு பயில வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், பெரியார் பல்கலைக் கழகத் தேர்வாணையர் (பொறுப்பு) கதிரவன், புல முதன்மையர் முத்துசாமி, தேசிய மாணவர் படை கமாண்டிங் அலுவலர் கர்னல் பி.தாமஸ் பிலிப், விங் கமாண்டர் யுவராஜ், கோவை மண்டல தேசிய மாணவர் படை அலுவலர் எம்.டி.கண்ணன், பல்கலைக் மேலாண்மைத் துறை தலைவர் பழனிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.