மாணவர்களை அடித்ததாக புகார் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்

மாணவர்களை அடித்ததாக புகார் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்
Updated on
1 min read

எடப்பாடி அருகே பள்ளி மாணவர்களை அடித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

எடப்பாடி அடுத்த தாராபுரம் மெய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று முன்தினம் மாணவர்களுக்கு 2-ம் பருவ பாட நூல்கள் வழங்கப்பட்டது. இதனைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள் பள்ளி மைதானத்தில் நடனமாடி விளையாடிக் கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்த அங்கு பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் தங்கராஜ் (50), அந்த மாணவர்களை அழைத்து, தான் நடனம், கராத்தே பயிற்சி அளிப்பதாக கூறி மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். அப்போது, சில மாணவர்கள் முறையாக செய்யவில்லை எனக்கூறி அவர்களை அடித்துள்ளார்.

இதுதொடர்பாக மாணவர்கள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, கிராம மக்கள் 20-க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு வந்து தங்கராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு சென்ற தலைமை ஆசிரியர் மெய்வேல், வட்டாரக் கல்வி அலுவலர் சரோஜா, எடப்பாடி மாவட்ட கல்வி அலுவலர் விஜயா ஆகியோர் விசாரணை நடத்தினர்.

அப்போது, ஆசிரியர் தங்கராஜ் மது போதையில் மாணவர்களை தாக்கியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர். மேலும், இதுதொடர்பாக எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

விசாரணை அடிப்படையில் ஆசிரியர் தங்கராஜை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட கல்வி அலுவலர் சரோஜா உத்தரவிட்டார். இதனிடையே, ஆசிரியர் தங்கராஜ் மது அருந்தி இருந்தாரா என்பதைக் கண்டறிய சேலம் அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in