

கரோனா தொற்றைக் கண்டறிய துரித பரிசோதனை செய்வதற்கு 114 நிறுவனங்களின் உபகரணங்களை பயன்படுத்த மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அறியும் பரிசோதனை தமிழகத்தில் முதலில் தொடங்கப்பட்டது. ஆனால், சீன நிறுவனங்களின் உபகரணங்கள் தரமற்றவையாக இருந்ததால், பரிசோதனை நிறுத்தப்பட்டது.
அதேநேரத்தில், நோய் எதிர்ப்புசக்தியைக் கண்டறிய ஐஜிஜி என்றபுதிய வகை ரத்த மாதிரி பரிசோதனை கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் தொடங்கப்பட்டது. இதன் முடிவுகள் சரியாகவும், விரைவாகவும் இருந்ததால் இதேபரிசோதனையை தமிழகம் உட்பட நாடுமுழுவதும் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பல்வேறு நாடுகள் விண்ணப்பம்
இந்த துரித பரிசோதனையை மேற்கொள்ளத் தேவையான உபகரணங்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய, இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்திருந்தன.
அவற்றின் தரத்தை சோதனை செய்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் 114 நிறுவனங்களின்உபகரணங்களை பயன்படுத்த அனுமதித்துள்ளது. இதேபோல், 161 நிறுவனங்களின் பிசிஆர் உபகரணங்களை பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.