

ஈரோடு மாவட்டம் கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்துக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் மானிய விலையில் பெரிய வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தின் தொடக்க விழா நடந்தது.
விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிப்பதற்கு ஏதுவாக, 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 303 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வி பயிலவுள்ளனர்.
நீட் தேர்வில் இந்த ஆண்டு குறைந்த மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள், மீண்டும் தேர்வு எழுதி கூடுதலாக மதிப்பெண்பெறும் வகையில் ஆன்லைன் மூலம் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிளஸ் 2 படித்து கொண்டு நீட் தேர்வுக்கு பயிற்சிபெறும் அரசுப் பள்ளி மாணவர்களோடு இணைந்து, இவர்கள் பயிற்சி பெறுவார்கள். இப்போது 9,438 மாணவர்கள் ஆன்லைன் மூலம் பயிற்சியை பெற முன்வந்துள்ளனர் என்றார்.