

தூத்துக்குடி அருகே லாரி புக்கிங் அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,200 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது.
இலங்கையில் சமீப காலமாக மஞ்சளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தல் அதிகரித்து வருவதால் கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலும் போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் உள்ள வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி அருகே சோரீஸ்புரம் சாலை பகுதியில் மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிப்காட் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் அங்குள்ள லாரி புக்கிங் அலுவல கத்தில் சோதனை நடத்தியதில் சுமார் 1200 கிலோ மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
உடனடியாக போலீஸார் மஞ்சளை பறிமுதல் செய்து தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி களிடம் ஒப்படைத்தனர். உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தை மூடினர். மேலும், இலங்கைக்கு கடத்துவதற்காக மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.