

ஆந்திர மாநிலத்தில் நடந்த மண்டல பஞ்சாயத்து மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல்களில், தெலங்கானாவில், தெலங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்) கட்சியும், சீமாந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியும் முன்னணியில் உள்ளன.
ஆந்திர மாநிலத்தில், கடந்த ஏப்ரல் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக மண்டல பஞ்சாயத்து மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற்றன.
உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின், இதன் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆந்திர மாநிலத்தில், 1096மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு, 5034வேட்பாளர்களும், 16,589 மண்டல பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளுக்கு 53,345 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.
திங்கள்கிழமை நகராட்சி, மாநகராட்சிகளுக்குவாக்கு எண்ணிக்கை நடந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்ட வேளையில், கிராமப்புறங்களில் மக்கள் செல்வாக்கு யாருக்கு என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் செவ்வாய்க் கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
முதலில் தபால் வாக்கு கள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து, 25 வாக்கு சீட்டுகளாக பிரிக்கப்பட்டு, மண்டல வாரியாக எண்ணப்பட்டன. சில இடங்களில் மதியம் வரை எண்ணிக்கை தொடங்கப்படவில்லை.
சீமாந்திராவில், கிருஷ்ணா, பிரகாசம், நெல்லூர், கடப்பா, சித்தூர், கர்னூல் ஆகிய மாவட்டங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது.
தெலுங்கு தேசம் கட்சி, விஜயநகரம், ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், கிழக்கு, மேற்கு கோதாவரி, அனந்தபூர் மாவட்டங்களில் அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது.
சீமாந்திராவில் அதிக பஞ்சாயத்துகளை தெலுங்கு தேசம் கைப்பற்றி உள்ளது.
இதே போன்று தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியைவிட, தெலங்கானா ராஷ்டிர சமிதி அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது.