உத்தமபாளையத்தில் பாரம்பரியத்தை இழந்து நிற்கும் சமணர்மலை: அரிய வகை புடைப்புச் சிற்பங்கள் தொடர்ந்து சேதம்

உத்தமபாளையத்தில் பாரம்பரியத்தை இழந்து நிற்கும் சமணர்மலை: அரிய வகை புடைப்புச் சிற்பங்கள் தொடர்ந்து சேதம்
Updated on
1 min read

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள திருக்குணகிரிசமணர் மலை கண்காணிப்பு இன்றி உள்ளது. இதனால் திறந்தவெளி 'பார்'- ஆக மாறி இருப்பதுடன் அங்குள்ள அரியவகை புடைப்புச் சிற்பங்களை சேதப்படுத்தும் நிலையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சமண மதம் வடமாநிலங்களில் உருவானாலும், தமிழ் மன்னர்களின் ஆதரவினால் தென்பகுதியிலும் பரவியது. பிறஉயிருக்குத் தீங்கு இழைக்காமை, பற்றற்ற துறவற வாழ்க்கை, பிரிவினைகள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு கோட்பாடுகளைக் கொண்டிருந்ததால் பலரும் இதனைப் பின்பற்றத் துவங்கினர்.

சமணர்கள் மலைப்படுகையில் தங்கி கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டனர். இவர்கள் தங்கிய இடங்களில் எல்லாம் புடைப்பு சிற்பங்களையும், வட்டெழுத்தில் பல்வேறு தகவல்களைக் கல்வெட்டுக்களாகவும் பொறித்தனர்.

கழுகுமலை, மதுரை சமணர்மலை, யானைமலை, கீழவளவு, சித்தன்னவாசல், எண்ணாயிரம், கும்பகோணம், திருவண்ணாமலை-சீயமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சமணர் படுகைகளும், கல்வெட்டுகளும் அதிகம் உள்ளன.

தேனி மாவட்டத்தைப் பொறுத்தளவில் உத்தமபாளையம்-கோம்பை சாலை திருக்குணக்கிரி மலையில் சமணச்சின்னங்கள் அதிகம் உள்ளன.

இந்த மலையின் பல இடங்களிலும் மூலிகை அரைக்கப்பட்ட குழிகள், புடைப்புச்சிற்பங்கள், அணையாவிளக்கு தூண், வட்டெழுத்து கல்வெட்டுக்கள், சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள், சுனை உள்ளிட்டவை உள்ளன.

தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இது உள்ளது. ஆனால் இங்கு கண்காணிப்போ, பராமரிப்போ எதுவும் இல்லை.

இதனால் திறந்தவெளியாக கிடக்கும் இந்த பாரம்பரியப் பகுதியை பலரும் மது அருந்துதல் உள்ளிட்ட தவறான செயல்களுக்கே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

சிறிய உயிருக்குக் கூட பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக மயில் இறகினால் கூட்டிக் கொண்டே நடந்து சென்றவர்கள் சமணர்கள். அந்தளவிற்கு அகிம்சையை கடைபிடித்தவர்களின் சிற்பங்களுக்கு அருகிலேயே மதுஅருந்துவர்கள் பல்வேறு இறைச்சிகளையும் சமைத்து உண்டு வருகின்றனர்.

குடித்து விட்டு பாட்டிலை உடைப்பதுடன், சிற்பங்களையும் சேதப்படுத்துகின்றனர். இன்னும் சிலர் தங்கள் பெயரையும், ஊரையும் செதுக்குகின்றனர். இதனால் பாரம்பரியம்மிக்க இந்த சமண அடையாளச் சின்னங்கள் வெகுவாய் சிதைந்து வருகின்றன.

இது குறித்து தேனி மாவட்ட வரலாற்று ஆய்வு மையத் தலைவர் சோ.பஞ்சுராஜா கூறுகையில், சமண மதம் கிமு 3-ம்நூற்றாண்டிலே தோன்றிவிட்டது.

24-வதுதீர்த்தங்கரரான மகாவீரர் காலத்தில் இது மிகவும் புகழ்பெற்றது. கிபி 7-ம்நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் பாண்டியமன்னனான கூன்பாண்டியனுக்கு ஏற்பட்ட நோயை நீக்கி சமணமதத்தில் இருந்து சைவ மதத்திற்கு மாற்றினார்.

இதனைத் தொடர்ந்து சமணர்கள் கழுவேற்றம் செய்து கொல்லும் நிலை ஏற்பட்டது.

உத்தமபாளையம் திருக்குணக்கிரி மலை அக்காலத்தில் வெளிநாட்டு வணிகர்கள் தங்கும் இடமாகவும் இருந்துள்ளது. இதன் தொன்மையை காக்கவும், பராமரிக்கவும் தொல்லியல்துறை கண்காணிப்பு பணியாட்களை நியமிக்க வேண்டும். சுற்றுலாப் பகுதியாக மாற்றி இன்றைய தலைமுறையினருக்கு இதன் சிறப்புகளை விளக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in