மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவுக்கு இதுதான் கடைசித் தேர்தல்: ஆ.ராசா எச்சரிக்கை

மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவுக்கு இதுதான் கடைசித் தேர்தல்: ஆ.ராசா எச்சரிக்கை
Updated on
1 min read

மோடி மீண்டும் பிரதமரானால், இந்தியாவுக்கு இதுதான் கடைசித் தேர்தல் என, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா இன்று (வெள்ளிக்கிழமை) பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அதில், விசிக தலைவர் தொல்.திருமாவளவனும் கலந்துகொண்டார்.

கூட்டத்தில் ஆ.ராசா பேசியதாவது: "பாஜக ஆட்சியில், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமதர்மம் ஆகிய இந்தியாவின் முக்கிய மூன்று கூறுகளுக்கும் ஆபத்து வந்துள்ளது. இந்துத்துவாவுக்கு எதிரான கருத்துகளைச் சொன்னால் எங்களைக் கொல்ல வருகிறார்கள். கவுரி லங்கேஷ், கல்புர்கி, நரேந்திர தபோல்கர் உள்ளிட்ட பகுத்தறிவாளர்கள் இதனால் கொல்லப்பட்டனர்.

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இன்று ஆபத்து வந்துள்ளது. அதன் பணியாளர்களுக்கு மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. எல்லா பொதுத்துறை நிறுவனங்களையும் மூடுகிறார்கள். ஊட்டியில் இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் என்ற தொழிற்சாலையை மூடி விட்டனர். அதனை புதுப்பிக்க காங்கிரஸ் ஆட்சியில் வாங்கிக் கொடுத்த 300 கோடி ரூபாயையும் 'ஸ்வாஹா' செய்து விட்டனர். இப்படியே போனால், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தையும் மூடி விடுவார்கள் அல்லது தனியாருக்கு தாரை வார்த்து விடுவார்கள். இந்தியாவை இந்து நாடாக்குகின்றனர்.

பிரதமர் மோடி மீண்டும் பிரதமரானால், இந்தியாவுக்கு இதுதான் கடைசித் தேர்தல். அரசியல் சட்டத்தைக் கொளுத்திவிட்டு, அதிபர் ஆட்சியைக் கொண்டு வந்துவிடுவர். சமூக நீதி இருக்காது. இந்தியா இந்து தேசமானால், பாகிஸ்தானில் என்ன நிலைமையோ அதுதான் இங்கும் ஏற்படும்.

ராமதாஸ் முட்டாள் அல்ல, அவர் ஒரு சந்தர்ப்பவாதி. வன்னியர்கள் உட்பட பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வந்ததற்குக் காரணம் அம்பேத்கர் தான் என்பதை உணர்ந்து தான், அம்பேத்கருக்கு அன்றைக்கு 100 சிலைகளை ராமதாஸ் வைத்தார். ஆனால், பணமும், பதவியும் அவர் கண்ணை மறைத்துவிட்டது.

இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போக்கு நிலவுகிறது. அதனைத் தடுக்க நம் சுயநலத்திற்காக பாரிவேந்தர், திருமாவளவன், நான் நாடாளுமன்றம் செல்ல வேண்டும்.

பாஜகவின் ஒற்றைக் கலாச்சாரத்திற்கு எதிராக 'தேசம் காப்போம்' என்ற பெயரில் முதன்முதலில் மாநாடு நடத்திய பெருமை திருமாவளவனுக்கு உள்ளது".

இவ்வாறு ஆ.ராசா பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in