

தேர்தலில் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகள் டெல்லியில் முஸ்லிம் வாழும் பகுதிகளில் எழுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதை எழுப்பிய டெல்லி பாஜக அங்கு சிறப்பு பார்வையாளர்களை அதன் மசூதிகளில் நியமிக்க வேண்டும் என மத்திய தேர்தல் ஆணையத்திடம் கோரியுள்ளது.
இது குறித்து டெல்லி மாநில பாஜகவின் சட்டப்பிரிவு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இதில், டெல்லியில் ஆளும் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் அவரது ஆம் ஆத்மி கட்சியினர் மீது புகார் அனுப்பியுள்ளது.
இது குறித்து டெல்லி பாஜகவின் சட்டப்பிரிவின் அமைப்பாளர் கூறும்போது, ''முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பேசும் மதத்தலைவர்களும், அரசியல் தலைவர்களும் மதரீதியாக வாக்குகளைப் பிரிக்கும் வகையில் பேசுகின்றனர்'' எனப் புகார் தெரிவித்தார்.
தனது புகாரில் பாஜக, மசூதிகளில் பார்வையாளர்களை நியமிப்பதன் மூலம் அப்பகுதியில் நிகழும் கலவரங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் வரும் மே 12-ல் நடைபெறுகிறது.
தற்போது இதன் அனைத்து தொகுதிகளிலும் பாஜக எம்பிக்கள் உள்ளனர். இங்கு பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.