

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் எம்.சிவகுமாருக்கு பதில் எம்.ஸ்ரீதர் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் குழுவின் பரிந்துரைப்படி வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் இந்தியக் குடியரசு கட்சியுடன் கூட்டணி அமைத்து மக்கள்நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது. இதற்கிடையே மக்கள்நீதி மய்யம் சார்பில் வேட்பாளர்களின் நேர்காணல் கடந்த வாரம்சென்னையில் நடைபெற்றது. கல்வித் தகுதி, தொகுதி மக்களுக்கு ஆற்றிய சேவைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து முதல்கட்டமாக 21 பேர்களின் பெயர்களை கமல்ஹாசன் சென்னையில் கடந்த 20-ம் தேதி வெளியிட்டார்.
இதில் கமீலா நாசர் மத்திய சென்னையிலும், முன்னாள் காவல்துறை அதிகாரி மவுரியா வட சென்னையிலும் போட்டியிடுகின்றனர். இந்த இருவரைத் தவிர, வேறு அறிமுகமான நபர்கள் யாரும் பட்டியலில் இடம் பெறவில்லை.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் எம்.சிவகுமாருக்கு பதில் எம்.ஸ்ரீதர் போட்டியிடுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் குழுவின் பரிந்துரைப்படி ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியின் மக்கள் நீதி மய்யக் கட்சியின் வேட்பாளராக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த எம்.சிவகுமாருக்குப் பதிலாக எம்.ஸ்ரீதர் மக்கள் நீதி மய்யக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்'' என்று தெரிவித்துள்ளார்.