தமிழகத்தில்தான் அதிகம்; 15 நாட்களில் இதுவரை ரூ.540 கோடிக்கு பணம், இலவசப் பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்

தமிழகத்தில்தான் அதிகம்; 15 நாட்களில் இதுவரை ரூ.540 கோடிக்கு பணம், இலவசப் பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்
Updated on
1 min read

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததில் இருந்து நாடு முழுவதும் இதுவரை ரூ.540 கோடிக்கு பணம், மது, இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 10-ம் தேதி மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்து தேர்தல் நடத்த விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டன. கடந்த 15 நாட்களில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கில் அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனையிடப்பட்டு வருகினறன. தனியார் கார், பஸ், அரசுப் பேருந்துகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள் ஆகியவற்றில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பறக்கும் படைகள் மூலம் நேற்று வரை ரூ.540 கோடி மதிப்பிலான பணம், மது, இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதில் தமிழகத்தில் அதிகபட்சமாக சட்டவிரோதமாக வாக்காளர்களுக்கு வழங்க கொண்டு செல்லப்பட்ட வகையில் ரூ.107.24 கோடி மதிப்பிலான பொருட்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அடுத்து உத்தரப் பிரதேசத்தில் ரூ.104.53 கோடியும், ஆந்திர மாநிலத்தில் ரூ.103.40 கோடியும், பஞ்சாப் மாநிலத்தில் ரூ.92.80 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டன.

கர்நாடக மாநிலத்தில் பொருட்கள், பணம் என மொத்தம் ரூ.26.53 கோடியும், மகாராஷ்டிராவில் ரூ.19.11 கோடியும், தெலங்கானா மாநிலத்தில் ரூ.8.20 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒட்டுமொத்தமாக கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு, பணத்தின் மதிப்பு ரூ.539.99 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ரூ.143.37 கோடிக்கு ரொக்கப் பணமும், ரூ.89.64 கோடி மதிப்பிலான மதுவும், ரூ.131.75 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களும், தங்கம் உள்ளிட்ட விலைமதிப்பிலான பொருட்கள் ரூ.162.93 கோடிக்கும், இலவசப் பொருட்கள் ரூ.12.20 கோடிக்கும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in