

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்ததாக மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதனால், தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், திமுக அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மதுரையில் களமிறங்கும் வேட்பாளர் சு.வெங்கடேசன் விதிமுறைகளை மீறி கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பறக்கும் படை அதிகாரியான வட்டாட்சியர் தங்கமீனா, தல்லாகுளம் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்தார். இதனடிப்படையில் சு.வெங்கடேசன் மீது காவல்துறையினர் எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.