

நேர்த்தியும் கம்பீரமும் மிக்க நாடாளுமன்றக் கட்டிடம் இந்திய ஜனநாயகக் கட்டமைப்பின் உருவகம். 1,760 அடி சுற்றளவில் 560 அடி குறுக்களவில் வட்ட வடிவமாக அமைந்த கட்டிடம். கட்டிடத்தைச் சுற்றிலும் 144 தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றும் 27 அடி உயரம் கொண்டது. வளாகமோ, ஏறக்குறைய ஆறு ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்தக் கட்டிடத்தை வடிவமைத்தவர்கள் எட்வின் லுட்யென்ஸ், ஹெர்பர்ட் பேக்கர் என்ற இரண்டு கட்டிடக்கலை நிபுணர்கள். நாடாளுமன்றக் கட்டிடம் மட்டுமல்ல; நார்த் ப்ளாக், சவுத் ப்ளாக் என்று அழைக்கப்படும் அரசுக் கட்டிடங்களின் இரு பகுதிகளையும் குடியரசுத் தலைவரின் ராஷ்டிரபதி பவனையும் வடிவமைத்தவர்கள் இவர்கள்தான்.
கட்டுமானப் பணிகள் 1921-ல் தொடங்கின. முழுக் கட்டிடத்தையும் கட்டி முடிப்பதற்கு ஆறு ஆண்டுகளாகின. 1927 ஜனவரி 18-ல் கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது. அன்றைய மதிப்பில், இக்கட்டிடத்தைக் கட்டி முடிக்க ஆன செலவு ரூ.83 லட்சம். 1911-லேயே தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டுவிட்டது. இக்கட்டிடம் கட்டி முடிக்கப்படும்வரை, அரசாங்கமும் நாடாளுமன்றமும் பழைய டெல்லியில் உள்ள அரசுக் கட்டிடங்களிலேயே இயங்கிவந்தன. நாடாளுமன்றத்துக்கு அப்போது ‘பார்லிமென்ட்’ என்ற பெயர் கிடையாது. சட்ட பரிஷத், சட்ட கவுன்சில் என்ற பெயர்களில்தான் அழைக்கப்பட்டுவந்தது. மக்களவை, மாநிலங்களவை என்று இரண்டு அவைகளும் அப்போது இல்லை. சட்டசபை உறுப்பினர்களின் நூலகமாகத்தான் உள்மண்டபம் வடிவமைக்கப்பட்டது. பின்பு, அரசியல் நிர்ணய சபையின் கூட்டங்களை நடத்துவதற்காகச் சற்றே மாற்றியமைக்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டதும், 1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில் இந்தியா சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் இன்றைய நாடாளுமன்றக் கட்டிடத்தின் உள்மண்டபத்தில்தான்.