மற்றவர் பசி உணரும் பொள்ளாச்சி சுகுமார்

மற்றவர் பசி உணரும் பொள்ளாச்சி சுகுமார்
Updated on
1 min read

டந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில், ஒரு வேளை உணவுக்கு வழியின்றி விழிநிறைய கண்ணீருடன் தவித்த ஒரு வயதான தம்பதியரின் பசியை போக்கிய அந்த கணத்தில் முடிவெடுத்து பொள்ளாச்சி சுகுமார் உருவாக்கியது தான் ‘ராமகாரியம்’ அமைப்பு.

பொள்ளாச்சி நகரைச் சுற்றி 47 கிமீ சுற்றளவில் உள்ள முதியோர், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், தனித்துவிடப்பட்டவர்கள், அரசு மருத்துவமனையில் தனியாக சிகிச்சை பெற்று வருபவர்கள் என தினந்தோறும் 250 பேருக்கு பசியாற்றும் பணியை தனது மனைவி நிர்மலாதேவியின் ஒத்துழைப்புடன் செய்து வருகிறார்.

காலை 4 மணிக்கு உணவு தயாரிக்கும் பணியினை தொடங்கி 8 மணிக்குள் முடித்துவிட்டு, 10 மணி முதல் 2 வரை உணவு விநியோகிக்கிறார். ஆதரவற்றவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையை ஓய்வு பெற்ற அரசு மருத்துவர்களான சிவனாந்தம், நளினி ஆகியோர் உதவியுடன் செய்து வருகிறார்.

இவரது சேவையை அறிந்த பலர் அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்களை வழங்குகின்றனர். ஊறுகாய் நிறுவனம் ஒன்று ஊறுகாயும் வேறு சிலர் வாழை இலையும் வழங்குகின்றனர்.

இப்பணி குறித்து சுகுமாரை கேட்டோம், “வீட்டிலிருந்து ஏதேனும் ஒரு சூழலில் வெளியேறியவர்கள் தான் அதிகம் உள்ளனர். அவர்களுக்கு உணவு அளித்து, தேவையான மருத்துவ சிகிச்சையும் அளித்து வருகிறோம். இதுவரை 50 பேரை மீண்டும் அவர்களின் குடும்பத் துடனும் 15 பேரை அரசு காப்பகங்களிலும் 25 பேரை பல்வேறு இடங்களிலும் வேலைக்கு சேர்த்துள்ளேன்” என்கிறார் சுகுமார்.

தன் பசி உணர்வதில் ஆச்சரியமல்ல. மற்றவர் பசியை உணர்ந்து உதவுவதுதான் தர்மம். அதனை தவறாமல் செய்கிறார் சுகுமார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in